Saturday 20 December 2014

ஊடகம் யாருக்காக?

                
 ஊடகம் யாருக்காக?

(தலையங்க விமர்சனம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் திரு. சோதி இராமலிங்கம் மற்றும் திருமதி. கவிதா சோதி இராமலிங்கம் இருவரையும் பாராட்டி வரைந்த கவிதை).


21.12.2014


அமெரிக்க ஐக்கிய நாடுகள்

எழுந்திடும் வானைநோக்கி எண்ணிலா வெண்முகில்கள்!
இணைந்திடும் அவற்றினோடு எங்கெங்கும் கார்முகில்கள்!
விழுந்திடும் இடியெழுப்பும் வீறொலி கேட்டலாலே
விரைந்திடும் சிதறுநெல்லி மூட்டையாய்ப் பூவுயிர்கள்!
அழிந்திடா துலகைக்காக்கும் அருமழைக் காட்சியீதோ?
அன்றிது 'மைலாய்' தன்னில் அமெரிக்க ராணுவத்தார்
கொழுந்திடும் தீபரப்பி, குருவிபோல் சுட்டுத்தள்ள
குலைகுலை யாகமக்கள் கொலையுண்டு வீழுங்காட்சி!

வந்தனன் அங்கு'செய்மூர் ஹெர்ஷெ'னும் அந்தணன்றான்
வதையினால் துவண்ட'மைலாய்' வாதையைக் கேட்டறிந்தான்!
சொந்தநாட் டுப்படைதன் சொல்லொணாக் கொடுஞ்செயல்கள்
சுட்டன நெஞ்சைத் தீயாய்! சுழற்றினான் எழுதுகோலை!!
தந்தனன் அறிக்கையாகக் தான்கண்ட உண்மையெல்லாம்!
தந்திகள் வந்துவந்து தம்முன்னே வீழவீழ
முந்தின ஒன்றுக்கொன்றாய் முப்பது இதழ்களாங்கே
தந்தன செய்தியாக, தம்நாட்டுப் படையின் கோரம்!

இங்கிலாந்து

நடந்தது  'ஃபாக்லேண்ட்'தீவுக் கானபோர் அட்லாண்டிக்கில்!
நாள்தொறும் 'பீ. பீ.சீ ' யில் செய்திகள் ஓளிபரப்பில்,  
நடந்தவை பற்றிஇங்கி லாந்துமற் றர்ஜெண்ட்டினா
நாடுகள்ரெண்டும் சொல்லும் செய்திகள் சொல்லிவைக்க
கொடுந்துய ருற்றவர்போல் குமுறிய ஆங்கிலேயர்.  
எதிர்க்கவும், 'பீ. பீ. சீ.' யார் எதிர்மொழி அழகாய்ச்சொன்னார்:
"நடந்திடும் போரில்உண்மை முதலிலே சாகச்செய்யோம்;
நாட்டுப்பற் றென்னவென்று நமக்குநீர் சொல்லவேண்டாம்.

 ஊடகம் இஃதுயிங்கே உண்மைகள் சொல்வதற்கே!
போரிடும் வீரருக்குப் புத்துணர் வூட்டுதற்கோ
நாடகம் செய்துஆட்சி யாளரை நம்புமாறு
நாட்டுமக் கள்கருத்தை நாளும்வ ளைப்பதற்கோ
ஏடுகள் உண்டுயிங்கே; யாமதைச் செய்யமாட்டோம்!
இன்னுயிர் வீரர்நீத்து இப்போரால் கைம்பெண்ணாகி
வாடிடும் பெண்கள்இந்த நாட்டவ ரானாலென்ன
எதிரிநா டானாலென்ன? எமக்கவர் ஒருவரேயாம்!"

இட்டாலி:

இட்டாலி மக்களைத்தன் எண்ணற்ற ஊடகத்தால் 
கட்டிவைத் தாட்சிதன்னைக் கைப்பற்றி மேலும்நாட்டின்
சட்டமன் றைப்புரட்டிசில்வியோ பெர்லுஸ்கோனி
தொட்டவி டத்திலெல்லாம் துணிந்துபே ரூழல்செய்தான்.
தட்டியே அவனைக்கேட்கத் தாளிகை ஏதுமில்லை.
தம்நாடு காப்பதற்கு ஊடகர் முயலவில்லை
இட்டாலி நாடேமேற்கில் இகழ்ச்சிக்கா ளானபோது
சட்டங்கள் காக்குமாயம் மீட்டது நாட்டையங்கு!

பிற

விதிகளை மீறியங்கே வென்றனன் தேர்தல்என்று
விளக்கினான் ஜாக்ஆண்டர்சன்! வீழ்ந்தனன் நிக்சனாங்கே!
மதியினை மயக்குபோதை மருந்துக்கும் பல்லழிக்க
மண்ணுயிர்க் குண்மைகூறித் தன்னுயிர் தந்தாள்கேகன்
சதியினால் தனதுநாட்டு ராணுவம் செச்சன்யாவில்
செய்திட்ட கொடுமையெல்லாம் செய்தியாய்க் கொண்டுவந்தாள்.
எதுவந்த போதும் அஞ்சேன் என்றுதன் னுயிருமீந்தாள்
அன்புளங் கொண்டமங்கை அன்னாபொலிட் காவஸ்காயா!


இந்தியா:

அரசியல் என்பதிங்கே அனைவரும் வாழ்வதற்கா?
அல்லதோர் சிலர்க்குமற்றோர் அடிமைக ளாவதற்கா?
அரசியல் என்பதிங்கே முறைசெய்து காப்பதற்கா?
அதிகாரத் தால்மிரட்டிக் கொள்ளைய டிப்பதற்கா?
ஒருசெயல் கூடஆள்வோர் மறைவினில் செய்திடாமல்
உலகிற்கு வெளிச்சமிட்டு உரைப்பதூ டகமா? அன்றி
திரிசம வேலைசெய்து மக்களைத் திசைதிருப்பி
பெரு'மஃபி யா'க்களாகிப் பிழைப்பதூ டகமா?சொல்வீர்!  

'எழுதுகோல் தெய்வம்இந்த எழுத்துமே தெய்வம்'என்று
இலக்கணம் சொன்னானன்று இந்நாட்டு ஷெல்லிதாசன்
பழுதிலா இலக்கணந்தான் படைத்த 'சி.பி. ஸ்காட்' சொன்னான்,
புகழ்ந்திடு இகழ்ந்திடானால் நிகழ்ந்தவை திரித்திடாதே'
விழுதுகள் போலக்காக்கும் விளக்கங்க ளிவையிருந்தும்
வீணர்கள் ஊடகத்தை விலைபொரு ளாக்கிவைத்தார்!
 பொழுதெலாம் பொய்யைச்சொல்லி புல்லரை நல்லோர்போலப்
புனைந்திடும் ஊடகத்தார் போலொரு கயவர்உண்டோ?

(வேறு)

நால்வருணக் கொள்கை:

கொடுமையிற் கொடுமைசெய்யும் குறுமதிச் சதுர்வர்ணத்தால் 
குவலயம்  துவளக்கண்டு கொதித்தனன் புத்தன்அன்று;
மடமையால் மறையைப்போற்றும் மக்களுக் குண்மைகூறி
அடிமையாய் வாடல்விட்டு விடுதலை கொள்ளவைக்கக் 
கடுமையாய் உழைத்தபுத்தன் கைக்கொண்ட கருவிஅன்பும் 
கருத்திலே உண்மையுந்தான்! காலாயி ரத்துஆண்டு
மிடிமையில் லாதுவாழ்ந்த மக்களை மீண்டும்வேதச்
சதியிலே வீழச்செய்தான் சாணக்ய  னென்றகோரன்.

பயங்கர வாதத்தாலும் பஞ்சமா பாதகத்தை
விஞ்சியே திருடர்மற்றும்  வேசியர் படையுங்கொண்டு
தயங்கிடா தெங்கும்கொள்ளை கொலைகளைச் செய்துகோயில்
தன்னையே அரசைக்கொல்லும் கூடமா யாக்கிமீண்டும்
நயங்கெடும் வேதசூழ்ச்சி நாட்டிலே பரவவைத்தான்
நல்லதோர் கல்வியின்றி நாலைந்து நூறுஆண்டு
மயங்கிய மக்களெல்லாம் பெரியாரால் விழிப்புகொண்டார்!
அன்புமற் றுண்மையோடு அறவழிப் போரால்வென்றார்!

பொய்யினை மெய்யினால்வெல்லென்றதந் நாளந்தாவே!
புலிட்சரும் அதையேசெய்தார்! புவியினை வாழவைத்தார்!
பொய்யர்க ளாளும்நாட்டில் மெய்சொனால் அவதூறென்பார்!
புல்லர்தம் மதிகாரத்தால் புவியினை மிரட்டிவைப்பார்!
நெய்யிடு  தீயேஉண்மைநேர்மைக்கு அச்சம்இல்லை
உட்வர்டு, செங்கர்மற்றும் பேரன்ஸ்டீன் போலவிங்கு
மெய்யினைத் தேடிக்கண்டு மையிட்டு எழுதும்போது
மிரட்டுவோர் மிரண்டுநிற்பார்! மேதினி எழுந்துநிற்கும்!
உலகிதில் நேர்மைவெல்ல உழைப்பதும் மெண்ணமாயின்
உண்மையா யுழைப்பவர்தம் உரிமைகள் காக்கவேண்டின்
நிலமிதில் தேர்வுசெய்வீர் இதழியல் வாழ்வுதன்னை!
நெடுங்கால மாகவர்ணக் கொடுமைகள் கண்டநாட்டில் 
வலிவுடை ஊடகங்கள் செயல்படும் முறைகள்பற்றித்
தெளிவுடை அறிஞர்தம்மைத் திரட்டிஞா யிறுகள்தோறும்
பொலிவொடு ஆய்வுசெய்த சோதிக்கும் கவிதாவிற்கும்
புகழ்மாலை மட்டுமில்லை! புகல்கின்றோம் நன்றி! நன்றி!!


   -வேயுறுதோளிபங்கன்

=============================================================================================
Note 1: My Lai in Vietnam. 
Note 2: Seymour Hersh 
Note 3: 'That night the BBC Chairman, George Howard – who had been appointed on the recommendation of Mrs Thatcher – made a speech defending the BBC and insisting that the Corporation was determined “that in war, truth shall not be the first casualty”……...The BBC’s Managing Director of Radio, Richard Francis, added to the discontent. On 11 May, in a speech in Madrid to journalists from around the world, he said: “It is not the BBC’s role to boost British troops’ morale or to rally British people to the flag...The widow in Portsmouth is no different from the widow of Buenos Aires...The BBC needs no lessons in patriotism from the present British Government or any other.”
 Note 4: Sylvio Berlusconi.
Note 5: Veronica Geurin : “The fearless Irish investigative journalist, murdered by drug barons in 1996 when she was just 36, has inspired two movies – including one starring Cate Blanchet, a biography and numerous songs. Renowned for her exposés of crime lords in Dublin, Guerin, who wrote for the Sunday Independent, received several death threats, and was even shot in the leg. But she carried on her reporting unfazed. Her sudden death, which shocked the entire nation, is also believed to have led Irish officials to establish the Criminal Assets Bureau. Survived by her husband and son, Guerin was posthumously named one of International Press Institute’s 50 World Press Freedom Heroes”.
Note 6: Anna Politkovskaya
“The Russian investigative journalist, famous for her coverage of human rights abuses by the Russian government in Chechnya, was assassinated in 2006 outside her Moscow apartment. The New York-born Anna Politkovskaya began her career as a reporter for the official newspaper, Izvestiya. She later joined the opposition-minded Novaya Gazeta newspaper in 1999 and soon after began reporting on the war in Chechnya. Her fearless reporting is believed to be the reason for her murder, however six years later, investigations are still ongoing”.
Note 7: “Facts are sacred. Comment is free” - Charles Prestwich.Scott - Editor Manchester Guardian.
Note 8: “Conquer a liar by truth” - Motto of Nalanda University that was burnt by the Aryans later.
Note 9: Joseph Pulitzer: A  prize is given for the best journalism contributions in his name. He wrote for newspapers and later purchased and ran the New York World. After it became obvious that his circulation war with Hearst was becoming problematic for the sensationalized stories, he gravitated toward truth in journalism. He was indicted for libel when he exposed an illegal payment to the French Panama Canal Company, but since the story was based on fact, the indictment was dismissed.
Note 10:Woodward and Bernstein: They brought then-president Richard Nixon down over the Watergate scandal. They are well-known for their investigative journalism and for proving that it was still possible for the press to effectively hold the government accountable.



Note 11: John Peter Zenger: He published the New York Weekly Journal in the 1700s. He wrote unflattering things about the British government, and in 1735 he was arrested and tried for libel. He was found not guilty, since what he wrote was based on fact. His case not only helped influence the American Revolution, but established one of the litmus tests for libel.

அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர்! - சில சங்க இலக்கியச் சான்றுகள். -ம.செந்தமிழன்

சில சங்க இலக்கியச் சான்றுகள்.
-ம.செந்தமிழன்


ஆரியத்தின் சாதியம் ஐந்து அடிப்படைகளைக் கொண்டது;
1. பிறப்பு அடிப்படை
2. குறிப்பிட்ட சாதியினர் குறிப்பிட்ட தொழில்தான் செய்ய வேண்டும் என்ற விதி
3. பிற பிரிவினருடன் கலவாமை / தனித்துவம் காத்தல்
4. தீண்டாமை
5. இவற்றை மீறுவோருக்குக் கடும் தண்டனைகள்


தொல்காப்பிய நால்வகைத் தொழிற்பிரிவுகளில் இந்த ஐந்து அடிப்படைகளுமே இல்லை. மேலும், தொல்காப்பியர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்;


’ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும்
யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)
-இதன் பொருள்,
’ஊர், பெயர்,தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே’ என்பதாகும். எந்தப் பிரிவினர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது திணிக்கப்பட்ட ’தர்மம்’ அல்ல என்பதை இந்த விதி விளக்குகிறது.


‘தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்க’ (மரபியல் 76)
-என்கிறார் தொல்காப்பியர். 


தலைமைப் பண்பைப் பொறுத்தவரை, அவரவரும் தமது நிலைமைக்கேற்பவே நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்கிறது இவ்விதி. தலைமைப் பண்பு என்பது, பிறப்பினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது, தொடர்புடையவர், குறிப்பிட்ட சூழலில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். 


மேற்கண்ட இரு விதிகளும் மிக விரிவாகப் பொருள் கொள்ளத்தக்கவை ஆகும். நால்வருணத்தின் அடிப்படைகளுக்கும் இவ்விதிகளுக்கும் முரண்பாடுகள் மட்டுமே இருக்கின்றன. 


மேலும், நால்வருணக் கோட்பாடு வகுத்த அதிகாரப்படிநிலை,
1. பிராமணர்
2. சத்ரியர்
3. வைசியர்
4. சூத்திரர்
-என்பதாகும். 
தொல்காப்பியம் வகுத்த நான்குவகைப் பிரிவுகளின் அதிகாரப்படிநிலை,
1. அரசர்
2. அந்தணர்
3. வணிகர்
4. வேளாளர்
-என்பது. இதில், பிராமணர் என்ற பிரிவே இல்லை. பிராமணர் இருக்க வேண்டிய இடத்தில் அரசர் உள்ளார். அவருக்குப் பிறகே, அந்தணர் வருகிறார். அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.


அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.


தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.


ஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும். 
’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது. 


சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் முனைவர்.இரா.மதிவாணன்.


சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம். 
இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று,


‘அய்யன்’ என்பதாகும்.
(Indus Script Dravidian / Dr.R.Mathivanan / Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)


(அ)ய்யஅன்
(அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்
(அ)ய்ய(ன்) வைகா சானஅன்
(அ)ய்ய(ன்) காங்கணஅன்
(அ)ய்ய(ன்)


(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)


ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்!
மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன. 


சாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது. சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.


ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது.


ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.


அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே. 


சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை –புலியூர் கேசிகன்). இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.


இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை,
’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.


குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;


’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’


அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?


தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.


‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது. 


பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.


இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.


எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;


‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).


இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள்தான் அகத்திணையியலில் கூறப்பட்டது.


அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.


இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.


ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.
’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.


எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.


இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.


ஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.


நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.


சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர். ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு. பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது. 


தமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது. 


பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை;
’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’
(தொல்காப்பியம், கற்பியல்-36)


அகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:
’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’
(அகநாநூறு 337)


குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.


‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’
(குறுந்தொகை 156)


பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.


இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.


ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம். 


குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களைத்தானே தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல. தொல்காப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள். 
மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை!

(From Facebook)